பொதுமக்கள் தங்களது தேவைகளையும், நீண்ட காலத்திற்கும் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் இலகுவாகவும் விரைவாகவும் தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள் நலச் சேவை முன்னெடுக்கப்பட்டது.காலை 9.00 மணிக்கு துன்னாலை கிழக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் ஆரம்பமான இந்த நடமாடும் சேவையில், துன்னாலை தெற்கு (J/370) மற்றும் துன்னாலை கிழக்கு (J/371) கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் துன்னாலை மேற்கு (J/374) கிராம அலுவலர் அலுவலகத்திலும் இச்சேவை தொடர்ச்சியாக நடைபெற்றது.இதில் பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் ஆராய்ந்தனர்.குறிப்பாக தேசிய அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதியோர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.காணி தொடர்பான நீண்டகாலப் பிணக்குகளுக்கு அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.காலங்கடந்த பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள் தொடர்பான சட்ட ரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான பதிவு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, சமூக விழிப்புணர்வு கருத்தரங்குகளும் இடம்பெற்றன.
இன்றைய நிகழ்வின் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட மக்கள் தமக்கான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சை முறைகளையும் பெற்றுக்கொண்டனர். மேலும், சிறுவர் மற்றும் முதியோர் நலன் சார்ந்த கழகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன."மக்களைத் தேடிச் சென்று சேவை வழங்குதல்" எனும் உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையின் மூலம், துன்னாலை பிராந்தியத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமது நிர்வாகத் தேவைகளைத் தங்கள் இடத்திலேயே நிறைவு செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது